Kandhar Kalivenba

Kandhar Kalivenba

பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய
பாமேவு தெய்வப் பழமறையும் – தேமேவு
1

Best deals from amazon today

நாதமும் நாதாந்த முடிவும் நவைதீர்ந்த
போதமும் காணாத போதமாய் – ஆதிநடு
2
அந்தம் கடந்தநித்தி யானந்த போதமாய்ப்
பந்தம் தணந்த பரஞ்சுடராய் – வந்த
3
குறியும் குணமுமொரு கோலமுமற்று எங்கும்
செறியும் பரம சிவமாய் – அறிவுக்கு
4
அனாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றே
மானதிகளுக்கு எட்டா வடிவாய்த் – தனாதருளின்
5
பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும்
தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய் – எஞ்சாத
6
பூரணமாய் நித்தமாய்ப் போக்குவரவும் புணர்வும்
காரணமும் இல்லாக் கதியாதித் – தாரணியில்
7
இந்திரசாலம் புரிவோன் யாரையும் தான்மயக்கும்
தந்திரத்தில் சாராது சார்வதுபோல் – முந்தும்
8
கருவின்றி நின்ற கருவாய் அருளே
உருவின்றி நின்ற உருவாய்த் – திரிகரணம்
9
ஆகவரும் இச்சை அறிவு இயற்ற லால்இயல
போகஅதி காரப் பொருளாகி – ஏகத்து
10
உருவம் அருவும் உருஅருவும் ஆகிப்
பருவ வடிவம் பலவாய் – இருள்மலத்துள்
11
மோகமுறும் பல்லுயிர்க்கு முத்திஅளித் தற்குமல
பாகமுறவே கடைக்கண் பாலித்துத் – தேகமுறத்
12
தந்த அருவுருவம் சார்ந்தவிந்து மோகினிமான்
பெந்த முறவே பிணிப்பத்து – மந்த்ரமுதல்
13
ஆறத்து வாவும் அண்டத்து ஆர்ந்தஅத்து வாக்களும்முற்
கூறத் தகும் சிமிழ்ப்பில் கூட்டுவித்து – மாறிவரும்
14
ஈரிரண்டு தோற்றத்து ஏழுபிறப்புள் யோனி என்பான்
ஆரவந்த நான்குநூ றாயிரத்துள் – தீர்வரிய
15
கண்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும்போற்
சென்மித்து உழலத் திரோதித்து – வெந்நிரய
16
சொர்க்காதி போகமெலாம் துய்ப்பித்துப் பக்குவத்தால்
நற்காரணம் சிறிது நண்ணுதலும் – தர்க்கமிடும்
17
தொன்னூல் பரசமயம் தோறும் அதுவதுவே
நன்னூல் எனத்தெரிந்து நாட்டுவித்து – முன்னூல்
18
விரதமுத லாயபல மெய்த்தவத்தின் உண்மைச்
சரியைகிரி யாயோகம் சார்வித்து – அருள்பெருகு
19
சாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்து
ஆலோகம் தன்னை அகற்றுவித்து – நால்வகையாம்
20
சத்திநி பாதம் தருதற்கு இருவினையும்
ஒத்துவரும் காலம் உளவாகிப் – பெத்த
21
மலபரி பாகம் வருமளவில் பன்னாள்
அலமருதல் கண்ணுற்று அருளி – உலவாது
22
அறிவுக்கு அறிவாகி அவ்வறிவுக்கு எட்டா
நெறியில் செறிந்தநிலை நீங்கிப் – பிறியாக்
23
கருணை திருஉருவாய்க் காசினிக்கே தோன்றிக்
குருபரனென்று ஓர்திருப்பேர் கொண்டு – திருநோக்கால்
24
ஊழ்வினையைப் போக்கி உடலறுபத் தெட்டுநிலம்
ஏழும் அத்துவாக்கள் இருமூன்றும் – பாழாக
25
ஆணவமான படலம் கிழித்து அறிவில்
காணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப் – பூணும்
26
அடிஞானத் தற்பொருளும் ஆன்மாவும் காட்டிக்
கடியார் புவனமுற்றும் காட்டி – முடியாது
27
தேக்குபர மானந்தத் தெள்ளமுதம் ஆகிஎங்கும்
நீக்கமற நின்ற நிலைகாட்டிப் – போக்கும்
28
வரவும் நினைப்பும் மறப்பும் பகலும்
இரவும் கடந்துஉலவா இன்பம் – மருவுவித்துக்
29
கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றும் தாழ்சடையும்
வன்மழுவும் மானுமுடன் மால்விடைமேல் -மின்னிடந்துப்
30
பூத்த பவளப் பொருப்புஒன்று வெள்ளிவெற்பில்
வாய்த்தனைய தெய்வ வடிவாகி – மூத்த
31
கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள் செய்து உள்நின்று
ஒருமலத்தார்க்கு இன்பம் உதவிப் – பெருகியெழு
32
மூன்றவத்தை யும்கழற்றி முத்தருட னேஇருத்தி
ஈன்றபர முத்தி அடைவித்துத் – தோன்றவரும்
33
யானெனதென்று அற்ற இடமே திருவடியா
மோனபரா னந்தம் முடியாக – ஞானம்
34
திருஉருவா இச்சை செயலறிவு கண்ணா
அருளதுவே செங்கை அலரா – இருநிலமே
35
சந்நிதியா நிற்கும் தனிச்சுடரே; எவ்வுயிர்க்கும்
பின்னமற நின்ற பெருமானே – மின்னுருவம்
36
தோய்ந்த நவரத்நச் சுடர்மணியால் செய்த பைம்பொன்
வாய்ந்த கிரண மணிமுடியும் – தேய்ந்தபிறைத்
37
துண்டம்இரு மூன்றுநிரை தோன்றப் பதித்தனைய
புண்டரம் பூத்தநுதல் பொட்டழகும் – விண்ட
38
பருவமலரப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்கு
அருள்பொழியும் கண்மலர் ஈராறும் – பருதி
39
பலவும் எழுந்துசுடர் பாலித்தாற் போலக்
குலவு மகரக் குழையும் – நிலவுமிழும்
40
புன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும்
சென்மவிடாய் தீர்க்கும் திருமொழியும் – வின்மலிதோள்
41
வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூர னைத்தடித்து
தெவ்வருயிர் சிந்தும் திருமுகமும் – எவ்வுயிர்க்கும்
42
ஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்ப
வாழ்வுதரும் செய்ய மலர்முகமும் – சூழ்வோர்
43
வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும்
முடிக்கும் கமல முகமும் – விடுத்தலாகப்
44
பால இருள்துரந்து பல்கதிரில் சோதிவிடம்
வாச மலர்வதன மண்டலமும் – நேசமுடன்
45
போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும்
மோகம் அளிக்கும் முகமதியும் – தாகமுடன்
46
வந்தடியில் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும்
தந்தருளும் தெய்வமுகத் தாமரையும் – கொந்தவிழ்ந்த
47
வேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த
பாரப் புயசயிலம் பன்னிரண்டும் – ஆரமுதம்
48
தேவர்க்கு உதவும் திருக்கரமும் சூர்மகளிர்
வேமக் குழைந்தணைந்த மென்கரமும் – ஓவாது
49
மாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையால்
சேர அணிந்த திருக்கரமும் – மார்பகத்தில்
50
வைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும்
உய்த்த குறங்கில் ஒருகரமும் – மொய்த்த
51
சிறுதொடிசேர் கையும்மணி சேர்ந்ததடங் கையும்
கறுவுசமர் அங்குசம்சேர் கையும் – தெறுபோர்
52
அதிர்கே டகம்சுழற்றும் அங்கைத் தலமும்
கதிர்வாள் விதிர்க்கும் கரமும் – முதிராத
53
கும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையார் வேட்டணைந்த
அம்பொன் மணிப்பூண் அகன்மார்பும் – பைம்பொன்
54
புரிநூலும் கண்டிகையும் பூம்பட் டுடையும்
அரைஞாணும் கச்சை அழகும் – திருவரையும்
55
நாதக் கழலும் நகுமணிப் பொற் கிண்கிணியும்
பாதத்து அணிந்த பரிபுரமும் – சோதி
56
இளம்பருதி நூறா யிரங்கொடி போல
வளந்தரு தெய்வீக வடிவம் – உளந்தனில்கண்டு
57
ஆதரிப்போர்க்கு ஆருயிராய் அன்பரகத் தாமரையின்
மீதிருக்கும் தெய்வ விளக்கொளியே – ஓதியஐந்து
58
ஓங்காரத்து உள்ளொளிக்கும் உள்ளொளியாய் ஐந்தொழிற்கும்
நீங்காத பேருருவாய் நின்றோனே – தாங்கரிய
59
மந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத்
தொந்தமுறும் வன்னமே தொக்காகப் – பந்தனையால்
60
ஒத்த புவனத் துருவே உரோமமாத்
தத்துவங்க ளேசத்த தாதுவா – வைத்த
61
கலையே அவயவாக் காட்டும்அத்து வாவின்
நிலையே வடிவமா நின்றோய் – பலகோடி
62
அண்டம் உருவாகி அங்கம் சராசரமாய்க்
கண்டசக்தி மூன்றுட் கரணமாய்த் – தொண்டுபடும்
63
ஆவிப் புலனுக்கு அறிவு அளிப்ப ஐந்தொழிலும்
ஏவித் தனிநடத்தும் எங்கோவே – மேவ
64
வரும்அட்ட மூர்த்தமாம் வாழ்வேமெய்ஞ் ஞானம்
தரும்அட்ட யோகத் தவமே – பருவத்து
65
அகலாத பேரன்பு அடைந்தோர் அகத்துள்
புகலாகும் இன்பப் பொருப்பும் – சுகலளிதப்
66
பேரின்ப வெள்ளப் பெருக்காறும் மீதானம்
தேரின்ப நல்கும் திருநாடும் – பாரின்பம்
67
எல்லாம் கடந்த இருநிலத்துள் போக்குவரவு
அல்லாது உயர்ந்த அணிநகரும் – தொல்லுலகில்
68
ஈறும் முதலுமகன்று எங்குநிறைந்த ஐந்தெழுத்தைக்
கூறி நடாத்தும் குரகதமும் – ஏறுமதம்
69
தோய்ந்து களித்தோர் துதிக்கையினால் பஞ்சமலம்
காய்ந்த சிவஞானக் கடாக்களிறும் – வாய்ந்தசிவ
70
பூரணத்துள் பூரணமாம் போதம் புதுமலரா
நாரகத்துள் கட்டு நறுந்தொடையும் – காரணத்துள்
71
ஐந்தொழிலும் ஓவாது அளித்துயர்த்த வான்கொடியும்
வந்தநவ நாத மணிமுரகம் – சந்ததமும்
72
நீக்கமின்றி ஆடி நிழலசைப்பான் போல்புவனம்
ஆக்கி அசைத்தருளும் ஆணையும் – தேக்கமழ்ந்து
73
வீசும் பனுவல் விபுதர் தனித்தனியே
பேசும் தசாங்கமெனப் பெற்றோனே – தேசுதிகழ்
74
பூங்கயிலை வெற்பில் புனைமலர்ப்பூங் கோதையிடப்
பாங்குறையும் முக்கண் பரஞ்சோதி – ஆங்கொருநாள்
75
வெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி
ஐந்து முகத்தோடு அதோமுகமும் – தந்து
76
திருமுகங்கள் ஆறாகிச் செந்தழற்கண் ஆறும்
ஒருமுகமாய்த் தீப்பொறியாறு உய்ப்ப – விரிபுவனம்
77
எங்கும் பரக்க இமையோர் கண்டு அஞ்சுதலும்
பொங்கும் தழல்பிழம்பைப் பொற்கரத்தால் – அங்கண்
78
எடுத்தமைத்து வாயுலைக் கொண்டு ஏகுதினெய்று எம்மான்
கொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோய் – அடுத்ததொரு
79
பூதத் தலைவகொடு போதி எனத் தீக்கடவுள்
சீதப் பகீரதிக்கே சென்றுய்ப்பப் – போதொருசற்று
80
அன்னவளும் கொண்டமைதற்கு ஆற்றாள் சரவணத்தில்
சென்னியில் கொண்டு உய்ப்பத் திருஉருவாய் – முன்னர்
81
அறுமீன் முலையுண்டு அழுதுவிளை யாடி
நறுநீர் முடிக்கணிந்த நாதன் – குறுமுறுவல்
82
கன்னியொடும் சென்று அவட்குக் காதலுருக் காட்டுதலும்
அன்னவள்கண்டு அவ்வுருவம் ஆறிணையும் – தன்னிரண்டு
83
கையால் எடுத்தணைத்துக் கத்தனெனப் பேர்புனைந்து
மெய்யாறும் ஒன்றாக மேவுவித்துச் – செய்ய
84
முகத்தில் அணைத்துஉச்சி மோந்து முலைப்பால்
அகத்துள் மகிழ்பூத்து அளித்துச் – சகத்தளந்த
85
வெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்து
உள்ளம் உவப்ப உயர்ந்தோனே – கிள்ளைமொழி
86
மங்கை சிலம்பின் மணிஒன்ப தில்தோன்றும்
துங்க மடவார் துயர்தீர்ந்து – தங்கள்
87
விருப்பால் அளித்தநவ வீரருக்குள் முன்னோன்
மருப்பாயும் தார்வீர வாகு – நெருப்பிலிதித்து
88
அங்கண் புவனம் அனைத்தும் அழித்துலவும்
செங்கண் கிடாஅதனைச் சென்றுகொணர்ந்து – எங்கோன்
89
விடுக்குதி என்றுஉய்ப்ப அதன் மீதுவர்ந்து எண்திக்கும்
நடத்தி விளையாடும் நாதா – படைப்போன்
90
அகந்தை உரைப்பமறை ஆதி எழுத்தென்று
உகந்த பிரணவத்தின் உண்மை – புகன்றிலையால்
91
சிட்டித் தொழிலதனைச் செய்வதெங்ஙன் என்றுமுனம்
குட்டிச் சிறையிருத்தும் கோமானே – மட்டவிழும்
92
பொன்னம் கடுக்கைப் புரிசடையோன் போற்றிசைப்ப
முன்னம் பிரமம் மொழிந்தோனே -கொன்னெடுவேல்
93
தாரகனும் மாயத் தடங்கிரியும் தூளாக
வீரவடி வேல் விடுத்தோனே – சீரலைவாய்த்
94
தெள்ளு திரை கொழிக்கும் செந்தூரில் போய்க்கருணை
வெள்ளம் எனத்தவிசின் வீற்றிருந்து – வெள்ளைக்
95
கயேந்திரனுக்கு அஞ்சல் அளித்துக் கடல்சூழ்
மயேந்திரத்தில் புக்கு இமையோர் வாழச் – சயேந்திரனால்
96
சூரனைச் சோதித்தவரு கென்றுதடம் தோள்விசய
வீரனைத் தூதாக விடுத்தோனே – காரவுணன்
97
வானவரை விட்டு வணங்காமை யால்கொடிய
தானவர்கள் நாற்படையும் சங்கரித்துப் – பானு
98
பகைவன் முதலாய பாலருடன் சிங்க
முகனைவென்று வாகை முடித்தோய் – சகமுடுத்த
99
வாரிதனில் புதிய மாவாய்க் கிடந்தநெடும்
சூருடலம் கீண்ட சுடர் வேலோய் – போரவுணன்
100
அங்கம்இரு கூறாய் அடன்மயிலும் சேவலுமாய்த்
துங்கமுடன் ஆர்த்தெழுந்து தோன்றுதலும் – அங்கவற்றுள்
101
சீறும்அர வைப்பொருத சித்ரமயில் வாகனமா
ஏறி நடாத்தும் இளையோனே – மாறிவரு
102
சேவல் பகையைத் திறல்சேர் பதாகைஎன
மேவத் தனித்துயர்ந்த மேலோனே – மூவர்
103
குறைமுடித்து விண்ணம் குடியேற்றித் தேவர்
சிறைவிடுத்து ஆட்கொண்ட தேவே – மறைமுடிவாம்
104
சைவக் கொழுந்தே தவக்கடலே வானுதவும்
தெய்வக் களிற்றை மணம்செய்தோனே – பொய்விரவு
105
காமம் முனிந்த கலைமுனிவன் கண்ணருளால்
வாமமட மானின் வயிற்றுதித்துப் – பூமருவு
106
கானக் குறவர் களிகூரப் பூங்குயில்போல்
ஏனற் புனங்காத்து இனிதிருந்து – மேன்மைபெறத்
107
தெள்ளித் தினைமாவும் தேனும் பரித்தளித்த
வள்ளிக் கொடியை மணந்தோனே – உள்ளம் உவந்து
108
ஆறுதிருப் பதிகண்டு ஆறெழுத்தும் அன்பினுடன்
கூறும் அவர் சிந்தைகுடி கொண்டோ னே – நாறுமலர்க்
109
கந்திப் பொதும்பர்எழு காரலைக்கும் சீரலைவாய்ச்
செந்திப் பதிபுரக்கும் செவ்வேளே – சந்ததமும்
110
பல்கோடி சன்பப் பகையும் அவமி|ருத்தும்
பல்கோடி விக்கினமும் பல்பிணியும் – பல்கோடி
111
பாதகமும் செய்வினையும் பாம்பும் பசாகம்அடல்
பூதமுதீ நீரும் பொருபடையும் – தீது அகலா
112
வெவ்விடமும் துட்ட மிருகமுதலாம் எவையும்
எவ்விடம் வந்து எம்மை எதிர்ந்தாலும் – அவ்விடத்தில்
113
பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும்
அச்சம் அகற்றும் அயில்வேலும் – கச்சைத்
114
திருவரையும் சீறடியும் செங்கையும் ஈராறு
அருள்விழியும் மாமுகங்கள் ஆறும் – விரிகிரணம்
115
சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்
எந்தத் திசையும் எதிர்தோன்ற – வந்திடுக்கண்
116
எல்லாம் பொடிபடுத்தி எவ்வரமும் தந்துபுகுந்து
உல்லாசமாக உளத்திருந்து – பல்விதமாம்
117
ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவ தானமும்சீர்ப்
பேசும் இயல் பல்காப் பியத் தொகையும் – ஓசை
118
எழுத்துமுத லாம்ஐந்து இலக்கணமும் தோய்ந்து
பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து – ஒழுக்கமுடன்
119
இம்மைப் பிறப்பில் இருவா தனைஅகற்றி
மும்மைப் பெருமலங்கள் மோசித்துத் – தம்மைவிடுத்து
120
ஆயும் பழைய அடியா ருடன்கூட்டித்
தோயும் பரபோகம் துய்ப்பித்துச் – சேய
121
கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு
அடியேற்கு முன்னின்று அருள்.
122
திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா முற்றிற்று….